February 21, 2008

உ.வே.சா.வும், சங்க இலக்கிய வாரமும்

இன்று மாலை எதேச்சையாக சாலையோரம் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், தமிழ் செம்மொழி உயராய்வு மையம், மைசூர் உம் சேர்ந்து நடத்திய சங்க இலக்கிய வாரம். தமிழ் நாடு முழுக்க ஒரே நேரத்தில் 100 இடங்களில் இது போன்ற கூட்டத்தை நடத்துகிறார்களாம்.
ஏதாச்சும் வெட்டி மொக்க போடுவானுங்கன்னு நினைச்சு போய் உட்கார்ந்தேன். ஆனால் உருப்படியாகவே பேசினார்கள்.
முந்தா நாள் (19-02-08) அன்று உ.வே.சா பிறந்த நாள். அதை ஒட்டி இந்த
வாரத்தையே சங்க இலக்கிய வாரமாக அறிவித்து இந்த நிகழ்ச்சியை நடத்திக்
கொண்டு இருந்தார்கள்.
சங்க இலக்கியங்களைக் காப்பாற்றிய பெருமை நம் தமிழ் தாத்தாவிற்கு
இருக்கிறது. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் போய் பல
இடங்களிலிருந்தும் சேகரித்த ஓலைச்சுவடியைக் கொண்டு சங்க இலக்கியங்களை உயிப்பித்திருக்கிறாராம். அவரின் பெயரில் உள்ள 'உ' உத்தமதானபுரம் என்கிற அவரின் சொந்த ஊரைக் குறிக்கிறதாம். இன்னமும் அவர் ஊருக்கு செல்ல பேருந்து வசதி இல்லையாம். இடிந்து கிடந்த அவரின் வீட்டை நினைவுச் சின்னமாக அறிவித்து ஒரு கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறதாம் அரசு.

தமிழ் செம்மொழியாக் அறிவித்ததனால் என்ன பிரயோசனம்?
பிரயோசனம் தான். தமிழ் படித்த 500 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது.
இன்னும் 2000 பேருக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாகப்
பேசிக் கொண்டிருந்தார் பேச்சாளர் தமிழ் செல்வன் என்பவர்.
தமிழைச் செம்மொழியாக அறிவித்த பின் மத்திய அரசு 40 கோடி ரூபாய்
செலவழித்திருக்கிறது. இன்னும் 1000 கோடி ரூபாய் செலவழிக்க இருக்கிறது.
ஆனால் பிழைக்க மட்டுமே தமிழ் படித்த மக்களில் தமிழ் அறிஞர்களே இல்லை அவல நிலை தான் இப்போது இருக்கிறது என்றார்.

உ.வே.சா பற்றிய குறிப்பும், சங்க இலக்கியம் பற்றிய சிறு அறிமுகமும் கொண்ட ஒரு சிறு பதிப்பை ஒரு லட்சம் பிரதிகள் தமிழ் நாடங்கும் விநியோகித்திருக்கிறார்கள் இந்த வாரத்தில்.

பேச்சாளர் உரை முடிந்ததும் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.
'கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து' பாடலுக்கு ஒரு 6 வயது சிறுமி அட்டகாசமாக ஆடினாள்.
அதற்கடுத்து 'ஆடல் கலையே தேவன் தந்தது' பாடலுக்கு 2 சுமாரான ஃபிகர்கள் மேடைத் தரையையே பார்த்தபடி பரதம் ஆடிக்
கொண்டிருந்தார்கள்.
நான் எஸ்கே.....ப்.

February 08, 2008

பார்வை விருந்து - சிறுகதை

சூரியப் பிரகாசத்தில் கதவில் ஊர்ந்து திரியும் வாலறுந்த பல்லியின்
கொல்லைப்புறத்தில் வைதேகியின் சப்தத்தில் மிதந்து போகும் புகை வளையத்தின்
ஊடாக கிளாவர் எட்டு, டயமண்ட் ஆறு சேர்த்து செய்த வெண்கலச் சிலையாய் நின்ற
வெண்ணெய் நிறப் பெண்ணின் திறந்த முதுகில் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு
கம்ப்ளெய்ன்ட் கொடுக்கச் சென்ற கேபிள் டிவிக்காரனின் முட்டியை உடைக்கனும்.

பயப்படாதீங்க. நம்ம கதாநாயகன் இன்னமும் தூக்கத்தில் இருந்து முழுமையாக
விடுபடவில்லை. விழிப்புக்கு முந்தைய நிலையில் (pre-conscious stage)
அவனின் சிந்தனையில் பிறந்த வார்த்தைகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.

- தொடர்கிறது-
- 'ஏங்க' வைதேகியின் குரல் அதட்டலாக உயர்ந்திருந்தது. 'இவ்ளோ நேரமாவா
தூங்குவீங்க, மணி 9 ஆகப் போகுது'
நம் கதாநாயகனின் பெயர் மணி அண்ணாச்சி. சிறு தொழில் அதிபர். அண்ணாச்சி கண் விழிக்கிறார். இன்று எதையோ சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவரின் கண்களில் தெரிகிறது. அவசரவசரமாக எழுந்து மேஜையைத் திறந்து பேப்பரும், பேனாவும் எடுத்து கடிதம் எழுத ஆரம்பிக்கிறார்.

பெறுநர்
உதவி காவல் ஆய்வாளர் அவர்கள்,
டவுன் காவல் நிலையம்
சிவகாசி

மதிப்பிற்குரிய ஐயா,
நேற்று, என்னுடைய அலுவலக வேலை முடிந்து இரவு 11 மணிக்கு தான் வீடு திரும்பினேன். நேரப் போக்குக்காக அப்போது டிவியை ஆன் செய்தேன். அப்போது
டிவியில் நான் கண்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்தது. அப்பட்டமான
படுக்கையறைக் காட்சிகள் கொண்ட நீலப் படத்தை கேபிள் டிவிக்காரர்கள்
ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
ஏதாகிலும் வீட்டில் குழந்தைகள் இதைப் பார்க்க நேர்ந்தால். நினைத்தாலே பீதி கிளம்புகிறது. நம்முடைய மரபான கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் கேபிள் டிவிக்காரர்களின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த இழிவான செயலைச் செய்த விஷமிகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
-மணி-
(உரிமையாளர் - டி.கே.எஸ். மேச் இன்டஸ்ட்ரீஸ்)

ஏட்டு கடிதத்தை வாங்கிப் படிக்கிறார்

- என்ன அண்ணாச்சி, நானும் தான் நேத்து அந்தப் படத்தைப் பாத்தேன். வாரம்
ஒரு நாள் தான் போடுறானுங்க. போட்டுட்டுப் போகட்டுமே
- சார், உங்களால நடவடிக்கை எடுக்க முடியுமான்னு மட்டும் சொல்லுங்க.
இல்லாட்டி மேலிடத்துக்கு போக வேண்டி வரும்
- வேண்டாம் அண்ணாச்சி, நீங்க அரசியல்வாதிங்க. எனக்கெதுக்கு வீண்
பொல்லாப்பு. கேபிள் டிவிக்காரன் எனக்கு தெரிஞ்சவன் தான். இனிமே இப்படி
படம் காட்டக் கூடாதுன்னு சொல்லிடுறேன். நடவடிக்கை எல்லாம் எதுக்கு?
- சரிங்க சார். அடுத்த வாரம் இந்த மாதிரி நடந்தா, அப்புறம் நான் வேற
மாதிரி தான் போக வேண்டி இருக்கும்.
- நான் பாத்துக்கிறேன் அண்ணாச்சி. ஆபிஸ் செலவுக்கு ஏதாச்சும் கொடுத்திட்டு போங்க.
அண்ணாச்சி சட்டைப் பைக்குள் கையை விட்டு 500 ரூபாயை எடுத்துக் கொடுக்கிறார்.

அண்ணாச்சியின் கடமையுணர்வு, கலாச்சாரப் பாதுகாப்புணர்வு பற்றி தெரிஞ்சிக்கிட்டீங்க இல்லையா. இல்லை, நீங்க தெரிய வேண்டியது இன்னமும் நிறைய இருக்கு.

அண்ணாச்சி, தன்னைத் தொழில் அதிபர் என்று சொல்லிக் கொண்டாலும், முதலில்
அவர் ஒரு வேட்டைக்காரர், இரண்டாவதாக ஒரு அரசியல்வாதி, மூன்றாவது தான்
தொழில். மது, மாது, சூது. கோரஸாக வரும் இந்த மூன்று வார்த்தைகளும் தான் ஒரு ஆணின் வீழ்ச்சிக்கு பெரிய காரணம்னு பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். மணி அண்ணாச்சிக்கு அந்த மூன்றாவது விஷயத்தின் மேல் தான் ஏகப் பிரியம். சீட்டு விளையாடப் போவதைத் தான் வேட்டைக்குப் போவதுன்னு சொல்வார். ஒரு சூதாடியின் கைகளை மணிக்கட்டோடு சேர்த்து வெட்டினாலும், காயம் ஆறிய பின் முழங்கையால் சீட்டு பிடித்து விளையாடுவான் என்பார்கள். நம்ம வேட்டைய ராஜாவும் அந்த கேஸ் தான்.

உள்ளூர் விளையாட்டில் 100, 200 வைத்து தான் விளையாடுவார்கள். வேட்டைய
ராஜா வாரம் ஒருமுறை வேட்டையாட மதுரைக்கு போவார். அங்கே ஆயிரங்களில்
விளையாடுகிறார்கள். எல்லாம் கள்ளத்தனமாக நடக்கிறது.

நேற்று இரவு 10 மணிக்கு ஆட்டம் ஆரம்பித்தது. வேட்டைய ராஜாவுக்கு நேற்று
நல்ல அதிர்ஷ்டம். மூன்று கேம் வரிசையாக ஜெயித்தார். நடுவில் இயற்கை உபாதை அடிவயிற்றை முட்ட கழிப்பறைக்குச் சென்றவர் திரும்பி வந்த போது, அதுவரை
அத்தனை ஆட்டக்காரர்களும் ஊதித் தள்ளிய சிகரெட் புகை மட்டுமே அறையில்
இருந்தது.
இங்கே சக ஆட்டக்காரர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. சேகர்,
ஆனந்த், குருமூர்த்தி, செளந்திர பாண்டியன். நாலு பேருமே அண்ணாச்சிக்கு
தொழில் முறை நண்பர்கள். குருமூர்த்தி தவிர மற்ற அனைவரும் மணியைப் போலவே தீவிர சூதாடிகள். குருமூர்த்தி ஒரு குவாட்டர் முடியும் வரை
விளையாடிவிட்டு மல்லாக்கப் படுத்து விடுவார். இந்தக் கூட்டத்திலேயே
ஆனந்த் மட்டுமே இளையவர். வயது 52. மற்ற எல்லாருமே ரிட்டையர்டு கேசுகள்.
அறுபதாம் கல்யாணம் பார்த்தவர்கள்.

ஆட்களைத் தேடியபடியே மணி அண்ணாச்சி பக்கத்து அறைக்குள் பிரவேசித்தார்.
கனமான மவுனம் அங்கே நிலவியது. அத்தனை சூதாடிகளின் கண்களும் அங்கிருந்த
தொலைக்காட்சித் திரையில் குத்திட்டு நின்றன.

குளியலறைக் கதவைத் திறந்து வெளியே வருகிறாள் ஒரு வெள்ளைக்காரி. வெண்ணிற டவலைச் சுற்றியிருக்கிறாள். கட்டிலில் அமர்ந்திருக்கும் வெள்ளைக்காரனை
ஒரு காமப் பார்வை பார்க்கிறாள். இப்போது கேமரா, நாயகியின் பின்னால்
நின்றபடி நாயகனைப் பார்க்கிறது. டவல் நழுவுகிறது. நாயகியின் வெண்ணிற
முதுகுக்குள் கேமரா மூழ்குகிறது.

மணி அண்ணாச்சிக்கு எரிச்சல் அடி வயிற்றிலிருந்து கிளம்புகிறது. அண்ணாச்சி
போர்னோ படங்களுக்கு எதிரானவர் இல்லை என்ற போதிலும் சூதாடும்
சுவாரஸ்யத்தில் இருந்தவரின் மனம், அந்தப் படத்தை நாடாமல் சக
ஆட்டக்காரர்களின் மேல் கோபமாக வெளி வரக் காத்திருந்தது.

குருமூர்த்தி - 'இப்போ ஒரு மாசமா தான் போடுறானுங்களாம். அதுவும் வாரம்
ஒரு நாள் தானாம்'
சேகர் - 'அட, வெண்கலச் சிலை மாதிரி என்ன ஒரு அழகு. நம்ம ஊர்லயும் தான்
இருக்காளுங்களே'
குருமூர்த்தி - 'அப்படிச் சொல்லாதப்பா. நம்ம ஊரு பொண்ணுங்களும் முதல்ல
நல்லா தான் இருக்காளுங்க. கல்யாணத்துக்கு அப்புறம் மூணு பங்கா பெருத்துடுறாளுங்க'

மணி - 'யோவ், உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்ல. விளையாட வந்துட்டு இப்படி
வெக்கமில்லாம உக்காந்து படம் பாக்குறீங்களே. வாங்கப்பா எந்திரிச்சு'
சேகர் - 'பேசாம போ. படம் முடிஞ்சதும் தான் வருவோம். பெரிய இவன் மாதிரி
பேசுற. அசிங்கமாம்ல, அசிங்கம்'
மணி - 'கிழட்டுக் ******ளா' இந்த வசவைக் கடுமையாகப் பிரயோகித்தபின்
கையிலிருந்த சீட்டுக் கட்டை விசிறி அடிக்கிறார்.
மொத்த அறையும் சீட்டுகளால் நிறைகிறது. எல்லாருடைய முகத்திலும் பயமும்,
வெறுப்பும் கொப்பளிக்கிறது. மணி வெளியேறி இருந்தார். சூழ்நிலை கனமாக
இருந்தது. சீட்டுகள் அலங்கோலமாக்கியிருந்த அறையில் நீலப்படம் மட்டும்
வெறுமையாய் ஓடிக் கொண்டிருந்தது.

February 03, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

காமெடி படம்னு நினைச்சு பாக்கப் போனா கடுப்படிச்சிட்டானுங்களே. ரேஸ்கல்ஸ்.

படத்தில் பெரிசாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை, இரண்டு எரிச்சல்களைத் தவிர.

1) கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணை, படி தாண்டியமைக்காக காலில் லாடம் கட்டுகிறார்கள் எமலோகத்தில். அப்பட்டமான ஆணாதிக்கப் பண்பாட்டை வலிந்து திணிக்கிறார்கள். ஒளவையின் காலத்திலிருந்தே இந்த சிந்தனை இருந்து வந்திருக்கிறது.
“ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு” - கொன்றை வேந்தன். எவ்வளவு மோசமான அடக்குமுறை. ஒளவையே ஒரு ஆணோ என்று கூட சந்தேகம் வருகிறது.

2) ஒரு இடத்தில் அழகப்பன், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த வந்த ஒருவனை, ‘நீ, உன் சின்னம்மாவின் மகளோடேயே' என்று தேவலோகத்தில் படித்த அவன் பற்றிய ரகசியத்தைச் சொல்வதான காட்சி. விலக்கப்பட்ட உறவுமுறை (இன்செஸ்ட்) யின் மீதான எதிர்ப்பைக் காட்டி கலாச்சாரக் கொடி நாட்டுகிறார்கள்.

தேவலோக கன்னி ரம்பை பூலோகம் வந்து அழகப்பனின் மேல் காதல் கொள்கிறாள்.
ரம்பையின் வேண்டுகோளை ஏற்று தினமும் இரவில் தேவலோகம் போய் வருகிறான்
அழகப்பன். அங்கே சில குளறுபடிகளைச் செய்த அழகப்பனையும், அவனை அழைத்து
வந்த ரம்பையையும் இந்திரன் சபிக்கிறான். அவர்கள் சாப விமோசனம் அடைந்தது
எப்படி என்பது கதை. கதைச்சுருக்கம் கேட்பதற்கு அழகாகத் தோன்றினாலும்,
நகைச்சுவையாக இந்தப் படத்தை நகர்த்தி இருந்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும். நடுவில் சொன்ன அந்தக் குளறுபடி மூலமாக, சமுதாய நல்வழிக்
கதையாகப் படத்தை நகர்த்த முனைந்ததில் படம் சறுக்குகிறது.
அந்தக் குளறுபடி என்ன?

தேவலோகத்தில் தான் கண்ட மனிதர்கள் பற்றிய ரகசியங்களை பூலோகத்தில் வந்து
சொல்லி மக்களை நல்வழிப் படுத்தி ஒரு உட்டோபியன்(utopia) உலகத்தைச்
சிருஷ்டிக்கிறார்கள். மக்கள் எல்லாம் திருந்துகிறார்கள். உலகமே அமைதிப்
பூங்காவாகிறது. நரகத்திற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில்
பூஜ்ஜியமாகிறது. சமுதாயப் பார்வையை விடுத்து ஒரு மனிதனின் அனுபவமாக
மட்டும் பதிவு செய்யப் பட்டிருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்குமோ
என்னவோ.

படத்தின் சிறப்பு, கூட்டம் கூட்டமாக அவ்வப்போது வரும் நாபிக் கமலங்கள்.
இதுவரை வந்த தமிழ் படங்களை விட அதிக எண்ணிக்கையில் வருகின்றன.

மொத்ததில் இந்தப் படம் “பகஞ்சரி பட்டு, முகஞ்சரி மொட்டு”
நீங்கள் - அப்படின்னா?
நான் - தயவு செய்து இந்தப் படத்துக்கு போகாதீங்க.