July 11, 2021

பதேர் பாஞ்சாலி- (பாதையின் பாடல்)

 பாதேர் பாஞ்சாலி- (பாதையின் பாடல்)

விபூதிபூஷண் பந்தோபாத்யாய்


மூங்கில் காட்டினருகில் இருக்கும் ஒரு கிராமம். அங்கே வறுமையின் பிடியில் ஒரு பிராமணக் குடும்பம் ஹரிஹர் ஒரு புரோகிதர். கிடைத்த இடத்தில் புரோகிதம் செய்து அவர் கொண்டு வரும் சொற்ப பணத்தில் குடும்பம் நடத்தத் திணறுகிறாள் அவரின் மனைவி சர்வஜயா. துர்கா மற்றும் அப்பு என இரு குழந்தைகள். ஹரிஹருக்கு அக்கா முறையில் தூரத்து உறவான இந்திர் என்ற கிழவியும் அங்கே வசிக்கிறாள். 



சர்வஜயாவுக்கு இந்திரை பிடிப்பதில்லை. தன் பிள்ளைகளுக்கு கெடுபுத்தியைக் கற்பிக்கிறாள் என்று பழிக்கிறாள். 

துர்க்காவின் இறப்பு, அத்துடன் துரத்தும் தரித்திரம். வாழ்வதற்கும் தகுதியில்லாததாக தங்களின் கிராமம் மாறிப்போனதை உணர்கிறார்கள். ஊரை விட்டு வெளியேறுவதென முடிவெடுக்கிறார்கள். பிழைப்பு தேடி காசிக்கு கிளம்பி செல்வதாக படம் முடிவடைகிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் தனது ப்ளாக்கில், துர்க்கா தன்னை மிகவும் கவர்ந்து விட்டாளென்றும், முதல்முறையாக படம் பார்த்தபோது , துர்க்கா வின் மரணத்துக்குப் பிறகான காட்சிகளைப் பார்க்கமுடியாதபடி மனம் கனத்து இருந்ததாகவும் எழுதியிருந்தார்.


எனக்கு இந்திர் கிழவியைத்தான் மிகவும் பிடித்திருந்தது. ஒடிசலான தேகம். வளைந்த கூன். பொக்கை வாய்ச் சிரிப்பு. மாறுகண். வயதான காலத்தில் எங்காவது ஒண்டி வாழவேண்டிய அவலம்.

சர்வஜயா வீட்டில் அனுமதிக்க மறுத்ததும், குடிக்க தண்ணீர் கேட்கிறாள் கிழவி. அந்த சாக்கில் கிழவி, அசடும் பரிதாபமும் வழியும் சிரிப்புடன் சர்வஜயாவின் முகத்தைப் பார்க்கிறாள். எப்படியாவது தன்னை ஏற்றுக் கொள்வாள் என்கிற நப்பாசை. சர்வஜயாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. கிழவியின் சிரிப்பு அடங்கி முகம் இருள்கிறது. கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு, தான் வளர்ந்துவரும் செடிக்கு மீதி தண்ணீரை ஊற்றி விட்டுக் கிளம்புவாள் கிழவி. பாட்டியின் நடிப்பிற்கு ஒரு சோறு பதம், அந்தக் காட்சி.

இந்திர் கிழவி, என் அய்யம்மாவை நினைவுபடுத்துகிறாள். எனது சிறுவயதில், ஆண்டுக்கொரு முறை வந்து ஓரிரு மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கிச் செல்வார் அய்யம்மா.


இந்தப் பிள்ளையாவது தன்னை நன்றாக கவனிப்பான் என்ற எண்ணத்துடன் வருவார். அந்தப் பிள்ளையின் கவனிப்பே பரவாயில்லை என்று திரும்பிச் செல்வார். 

முதுமை கொணர்ந்து சேர்த்த பார்வைக்குறைபாடு, காது மந்தம், மறதி, குறை கூறல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் என் அத்தனை சிக்கல்களும் அவருக்கு இருந்தன. வேண்டா விருந்தாளியாக அய்யம்மாவைக் கருதியததை இப்போது நினைக்கும்போது வருத்தமாயிருக்கிறது. அய்யம்மா மீது என் அக்காவுக்கு மட்டும் தனிப்பாசம் இருந்தது. இந்திர் மீதும் துர்க்காவுக்கு அதே போன்ற அன்பைக் காணமுடிந்தது