January 26, 2025

ரசவாதி (The Alchemist) நாவல் பற்றி

 ரசவாதி (The Alchemist) நாவல் பற்றி



"இதயத்தின் பேச்சைக் கேளுங்கள்" என்கிறது புத்தகம். சரி, அதையும் தான் கேப்பமேன்னு கேட்டா, "அதெப்படி திமிங்கலம், இந்த புத்தகத்த 80 மொழிகள்ல மொழிபெயர்த்தாங்க? கோடி பேருக்கு மேல படிச்சாங்க? நமக்கென்னவோ விட்டலாச்சார்யா படம் பார்த்த ஃபீல் தான் கெடச்சது" அப்படிங்குது இதயம்.


இதயம் கிடக்குது. பார் போற்றும் இந்த நாவலில் அப்படி என்னதான் இருக்குது? "கனவைப் பின்தொடர்தல்", "பிறவி நோக்கத்தை அறிதல்", (ஏற்கனவே சொன்ன)"இதயம் பேசுவதைக் கேட்டல்" - இது போதாதா என்ன.  நெஞ்சில் லட்சியச்சுடர் ஏற்றித் திரியும்/ லட்சியச்சுடர் ஏற்ற என்ன செய்யவேண்டுமென்று யோசித்துக் திரியும்/ ஏற்ற வேண்டுமா அல்லது ஏற்றத் தேவையில்லையா வென்று குழம்பித் திரியும் மக்கள் கொண்டாடுவதற்கு. 


ஆடுகள் மேய்க்கும் நாடோடி இளைஞன், தனக்கு அடிக்கடி வரும் ஒரு குறிப்பிட்ட கனவிற்கான அர்த்தம் தேடி , குறி சொல்லும் குறத்தியை சந்திக்கிறான். பெரிய புதையல் அவனுக்கு கிடைக்கப்போவதாகச் சொல்கிறாள் குறத்தி. புதையலைத் தேடிப் புறப்படுகிறான். அந்தப் பயணமே கதை. இந்த 'லட்சிய'ப்பயணத்தின் ஊடாக, கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சம் காதல், கொஞ்சம் மாயாஜாலம், கொஞ்சம் திகிலெனக் கலவையான மசாலாப் படம் பார்த்த உணர்வு.


லட்சியம், கனவு சரி. ஆனா, குறி கேக்குறது; சகுனங்களை அடையாளம் கண்டுக்குறது; பூவா, தலையா/ ஒத்தையா, ரெட்டையா , பாக்குற மாதிரியான உரிம்-துமிம் ங்கிற கற்களைப் பயன்படுத்துறது; "நீ  ஒன்றை அடைய விரும்பினால், பிரபஞ்சமே உனக்காக காய்களை நகர்த்தத் துவங்கும்"னு 'நம்பிக்கை' ஏற்படுத்துறது- இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியாத் தெரியுது.

இது தவிர காற்றோடு பேசுதல், சூரியனோடு பேசுதல், காற்றாகவே மாறுதல் போன்ற மாயாஜாலங்கள். உஷ்...ஷ்....ஷப்பப்பப்பா..........


நாவல்ல எனக்குப் பிடிச்ச ஒரே விசயம் என்னன்னா, கடவுள் கிட்ட பேசி காற்றாகவே தன்னை மாத்திக்கத் தெரிஞ்ச ஒரு நபர், புத்தர் மாதிரி ஞானியாகி , "ஆசையே துன்பத்திற்கு காரணம்" னு சொல்லிக்கிட்டு அமைதியா உட்காராம, பேராசை மந்திரவாதியா புதையலை எடுக்க புறப்படுகிறான். புதையலை எடுத்ததும் காதலியைப் பார்க்கக் கிளம்புறான். ஆன்மீகமும், லௌகீகமும் கூடிவாய்க்கப்பெற்ற வாழ்க்கைதான் நாவலாசிரியர் விரும்பும் லட்சியக் கனவோ என்னவோ.


செம்பை உருக்கி  தங்கமாக்கும் ரசவாதத்தில திரவ நிலையில அமுதம்(Elixir of Life) கிடைக்குமா மே. இப்பதான் கேள்விப்படுறேன். எல்லா நோய்களுக்கும் மருந்தாம். முதுமை வராதாம். சாவில்லா வாழ்வு தருமாம். "பேசாம, ரசவாதி ஒருத்தன தேடிப் போ. இதுவே உன் பிறவி நோக்கம்" அப்படிங்குது இதயம். என்ன செய்ய??


ஆம...., தங்கலான் படம் இந்த நாவலின் தழுவலா?

July 11, 2021

பதேர் பாஞ்சாலி- (பாதையின் பாடல்)

 பாதேர் பாஞ்சாலி- (பாதையின் பாடல்)

விபூதிபூஷண் பந்தோபாத்யாய்


மூங்கில் காட்டினருகில் இருக்கும் ஒரு கிராமம். அங்கே வறுமையின் பிடியில் ஒரு பிராமணக் குடும்பம் ஹரிஹர் ஒரு புரோகிதர். கிடைத்த இடத்தில் புரோகிதம் செய்து அவர் கொண்டு வரும் சொற்ப பணத்தில் குடும்பம் நடத்தத் திணறுகிறாள் அவரின் மனைவி சர்வஜயா. துர்கா மற்றும் அப்பு என இரு குழந்தைகள். ஹரிஹருக்கு அக்கா முறையில் தூரத்து உறவான இந்திர் என்ற கிழவியும் அங்கே வசிக்கிறாள். 



சர்வஜயாவுக்கு இந்திரை பிடிப்பதில்லை. தன் பிள்ளைகளுக்கு கெடுபுத்தியைக் கற்பிக்கிறாள் என்று பழிக்கிறாள். 

துர்க்காவின் இறப்பு, அத்துடன் துரத்தும் தரித்திரம். வாழ்வதற்கும் தகுதியில்லாததாக தங்களின் கிராமம் மாறிப்போனதை உணர்கிறார்கள். ஊரை விட்டு வெளியேறுவதென முடிவெடுக்கிறார்கள். பிழைப்பு தேடி காசிக்கு கிளம்பி செல்வதாக படம் முடிவடைகிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் தனது ப்ளாக்கில், துர்க்கா தன்னை மிகவும் கவர்ந்து விட்டாளென்றும், முதல்முறையாக படம் பார்த்தபோது , துர்க்கா வின் மரணத்துக்குப் பிறகான காட்சிகளைப் பார்க்கமுடியாதபடி மனம் கனத்து இருந்ததாகவும் எழுதியிருந்தார்.


எனக்கு இந்திர் கிழவியைத்தான் மிகவும் பிடித்திருந்தது. ஒடிசலான தேகம். வளைந்த கூன். பொக்கை வாய்ச் சிரிப்பு. மாறுகண். வயதான காலத்தில் எங்காவது ஒண்டி வாழவேண்டிய அவலம்.

சர்வஜயா வீட்டில் அனுமதிக்க மறுத்ததும், குடிக்க தண்ணீர் கேட்கிறாள் கிழவி. அந்த சாக்கில் கிழவி, அசடும் பரிதாபமும் வழியும் சிரிப்புடன் சர்வஜயாவின் முகத்தைப் பார்க்கிறாள். எப்படியாவது தன்னை ஏற்றுக் கொள்வாள் என்கிற நப்பாசை. சர்வஜயாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. கிழவியின் சிரிப்பு அடங்கி முகம் இருள்கிறது. கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு, தான் வளர்ந்துவரும் செடிக்கு மீதி தண்ணீரை ஊற்றி விட்டுக் கிளம்புவாள் கிழவி. பாட்டியின் நடிப்பிற்கு ஒரு சோறு பதம், அந்தக் காட்சி.

இந்திர் கிழவி, என் அய்யம்மாவை நினைவுபடுத்துகிறாள். எனது சிறுவயதில், ஆண்டுக்கொரு முறை வந்து ஓரிரு மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கிச் செல்வார் அய்யம்மா.


இந்தப் பிள்ளையாவது தன்னை நன்றாக கவனிப்பான் என்ற எண்ணத்துடன் வருவார். அந்தப் பிள்ளையின் கவனிப்பே பரவாயில்லை என்று திரும்பிச் செல்வார். 

முதுமை கொணர்ந்து சேர்த்த பார்வைக்குறைபாடு, காது மந்தம், மறதி, குறை கூறல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் என் அத்தனை சிக்கல்களும் அவருக்கு இருந்தன. வேண்டா விருந்தாளியாக அய்யம்மாவைக் கருதியததை இப்போது நினைக்கும்போது வருத்தமாயிருக்கிறது. அய்யம்மா மீது என் அக்காவுக்கு மட்டும் தனிப்பாசம் இருந்தது. இந்திர் மீதும் துர்க்காவுக்கு அதே போன்ற அன்பைக் காணமுடிந்தது

February 21, 2021

ஐயா சொன்ன சுடலைக் கதை

 

மல்லாங்கிணத்துக்கு கிழக்க இருக்குது முடியனூர். அங்க பெரியாண்டி னு ஒருத்தர் இருந்தாரு. பெரிய சண்டியரு. அவருக்கு கூட்டாளிங்க வளையாங்குளத்துல இருந்ததாச் சொல்லுவாங்க. யாருக்காச்சும் யாரையாச்சும் பிடிக்கலைன்னா பெரியாண்டியப் பாத்து வெவரத்தைச் சொல்லி கேக்குற காசக் குடுத்தாப் போதும். மிரட்டுறது, அடிதடி, வெள்ளாமக்காட்டுல அழிமாண்டம் பண்றது,  வைக்கப்படப்புக்கு தீ வைக்கிறதுன்னு என்ன வேணும்னாலும் பண்ணுவாரு. ஒருத்தர் கிட்ட காசு வாங்கிட்டு அவரோட எதிரி காட்டுல மெளகாச் செடிகளை மொத்தமும் பிடிங்கிப்போடுறது, அப்புறம் அந்த ஆளு கிட்ட காசு வாங்கிட்டு முதல்ஆளு காட்டுல துவரச்செடிகளை பிடுங்கி போடுறதுன்னு எல்லா வேலையும் பாப்பாரு.

மல்லாங்கிணத்திலிருந்து நம்ம ஊரு திம்மம்பட்டிக்கு போற பாதை இருக்குல்ல,  இப்பத்தான அது தார் ரோடு. முன்னாடி அது பள்ளமா இருக்கும். கம்மா நெறஞ்சா தண்ணி மாறுகால் பாயுற ஓடைல்ல அது. இரண்டு கரையிலயும் மஞ்சநெத்தி முளைச்சு கிய்யின்னு இருக்கும். ஸ்கூலுக்கு அந்த வழியாத் தான் போகணும். எப்பவாச்சும் பெரியாண்டி அந்த பாதையிலே வர்றாருன்னு தெரிஞ்சா நாங்கள்லாம் பயந்துக்கிட்டு முனியம்மன் கோயில் பாதைக்கு போயிருவோம்


அப்ப எங்க ஊர்ல சாமியடியான்னு ஒருத்தரு இருந்தாரு.  எங்க ராமண்ணே வீட்டுக்கு மேற்க ஒரு வீடு இருக்குல்ல. அந்த வீட்டுக்காரரு. அவரப் பிடிக்காத யாரோ போய் பெரியாண்டி கிட்ட சொல்லிட்டாக. அன்னிக்கு ராத்திரி பெரியாண்டியும் அவரு ஆளுகளும் சேந்து சாமியடியான் கிணத்துல கமலக்கல்ல உடைச்சிப்போட்டுட்டு வைக்கப்படப்புக்கு தீ வச்சுட்டாக.

சாமியடியான் அந்த நேரத்துல சுடுகாட்டுல இருந்திருக்காரு. ஒரு மூப்பமார் பையன் இறந்துட்டான்னு பிதைக்க வந்திருக்காரு. மூப்பமாரும் நம்மாளுகளும் அப்ப ஒன்னுமன்னுமாப் பழகிக்கிடுவாங்க.

மாமன் மச்சான்னும், அண்ணன் தம்பின்னும் உறவு சொல்லி கூப்பிடுக்கிடுவாக.  பள்ளம் தோண்டிக்கிட்டு இருந்தவரு மேற்க அவரு காட்டப்பக்கம் தீ எரியுற வெளிச்சத்த கவனிச்சிட்டாரு. கையில வச்சிருந்த கடப்பாரயத் தூக்கிக்கிட்டே ஓடியிருக்காரு. அங்கபோய்ப் பாத்தா படப்பு எரியுது, கமலக்கல்லு ஒடைஞ்சு கிடக்கு. ஊர்கூடிருச்சு.  எல்லாரும் நாலாப் பக்கமும் தேடுறாக.


பெரியாண்டியோட கூட்டாளிகள் எல்லாம் மொதல்லயே தப்பிச்சு ஓடிட்டாங்க. பெரியாண்டி கொஞ்சம் தொலவட்டுல ஒரு நாயக்கர் தோட்டத்துல நின்னு நாயக்கர் கூட பேசீட்டு அவர் தோட்டத்து கத்திரிக்காயை கொஞ்சம் புடுங்கிட்டு நிதானமா நடந்து போயிருக்காரு. சாமியடியான் பெரியாண்டியப் பாத்துட்டாரு. அவர்தான் படப்பக் கொளுத்துனார்னு இவர் சொல்ல, இவர் "இல்லை"ங்கன்னு பெரிய அமர்க்களம் ஆகி இரண்டு பேரும் அடிபுடின்னு மல்லுக் கட்டுறாங்க. அப்ப சாமியடியானோட நாய் பெரியாண்டி கால்ல வசமாக கடிச்சிருது. பெரியாண்டி வலியில சாயவும் சாமியடியான் கையிலிருந்த கடப்பாரய வச்சு பெரியாண்டி தலையில ஒரு போடு போடுறாரு. பெரியாண்டி அங்கேயே ஆள் காலி.


ஊர் ஒன்னு கூடி செஞ்ச கொலயை மறைக்கிறதுன்னு முடிவு பண்ணினாங்க. உடம்ப சாமியடியான் காட்டுக்கு தூக்கிட்டு போய் எரியிற படப்புல போட்டுட்டாங்க. அதுவும் எப்படி, துண்டு துண்டா வெட்டி.


மறுநாள் அந்தப் பக்கம் காட்டு வேலைக்கு வந்த பக்கத்துஊரு பொம்பளைங்க, "இதென்ன படப்புல யிருந்து சுடலை வாசம் வீசுது"ன்னு கேட்டிருக்காங்க. எங்க ஊர் பொம்பளைங்க, " அதான, நேத்து சாயந்திரம் பாம்பும் கீரியும் சண்டை போட்டு கிடந்துச்சு. உள்ள கிடந்து பொசுங்கி இருக்குமோ என்னமோ" ன்ருக்காங்க.


அப்புறம் போலீஸ் வந்துச்சு. மோப்ப நாய் வந்து சாமியடியான கவ்விப்பிடிச்சுச்சு. கோர்ட் கேஸுன்னு ஆகி கடைசியில எப்படியோ நிரபராதின்னு வெளிய வந்துட்டாரு.


பெரியாண்டியோட அட்டகாசம் அதோட முடிஞ்சிச்சா. அதான் இல்ல ஊர் பொம்பளைகளுக்குள்ள பேயா வந்து அப்பப்ப இறங்குவாரும்பாங்க. கிராமத்தில இதெல்லாம் சாதாரணம். "பெரியாண்டிடா நானு, அந்தப்பய என்ன கழுத்துல வெட்டுனான், இந்தப்பய என்ன மார்ல வெட்டுனான்"னு பேய் கொஞ்ச காலம் பேசிக்கிட்டு இருந்துச்சு அப்போ பேய் ஓட்டுறதுக்குன்னு நம்ம ஊர்ல ஒருத்தர் இருந்தாரு.  பேய்கூடப் பேசிக்கிட்டு இருக்கும்போதே திடீர்னு "ட்டாட்டா டிட் டீ டு ட்டூ டு ட்டாடாட்டி" ன்னு கத்துவாரு. நாங்கள் அவர எங்கயாவது பாத்தா "டாட்டாட்டூட்டுடீ"ன்னு கத்துவோம். அவர் எங்கள அடிக்க துரத்துவாரு. வேடிக்கையா இருக்கும்.


July 07, 2020


உறுபசி- அதீதப்பசி

நவீன வாழ்வின் 'செட்டில்'ஆதல் சம்பத் துக்கு வாய்க்காத நிலையிலேயே நோயால் மரணிக்கிறான். 'செட்டிலான 'அவனது மூன்று கல்லூரி நண்பர்கள் அவனது இறுதிச்சடங்கு வேலைகளைச் செய்கின்றனர். நண்பர்கள் மூவரும் சம்பத்துடன் உறவாடிய பொழுதுகளை நினைத்துப் பார்ப்பது போல் துண்டு துண்டான குறிப்புகளாக காலக்கிரமமின்றி எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல்.

திறன்கள் திறமைகள் இருந்தும் சம்பத்தால் ஏன் ஒரு சராசரியான பொருளாதார வாழ்க்கையைக்கூட அமைத்துக்கொள்ள முடியவில்லை. "பணம் சம்பாதித்தால் தான் உடலுறவு" என்பது வெட்கக்கேடானது என்கிறான் ஓரிடத்தில்.

சம்பத் ஒரு போராளியா? கலகக்காரனா? பொறுப்பற்றவனா?சிந்தனாவாதியா? எரிச்சலூட்டுபவனா? இன்னதென்று அவனை வகைப்படுத்த முடிவதே இல்லை.

கல்லூரிகளுக்கான இலக்கிய விழாவில் கம்பராமாயணத்தை எரித்த வழக்கில் கைதாகிறான்.
பின் திராவிட நாத்திக பேச்சாளனாக மேடைகளில் முழங்கினான்.
குடிபோதையில் மனதில் பட்டதை மேடையில் பேசி கட்சியில் இருந்து விரட்டப்பட்டான்.
மதுரையில் நட்டு போல்டு விற்பனை பிரதிநிதியாக இருந்தான்.
சிவகாசியில் கிறித்துவ போதனை நோட்டீஸ்கள் அச்சடிக்கும் ஜெசிந்தா அச்சகத்தில் வேலை பார்த்தான்.
அந்த சமயத்தில் வாராவாரம் நாமக்கல் சென்று லாட்டரி சீட்டுகளை வாங்கி எப்படியாவது பணம் சம்பாதிக்க முயற்சித்தான்.
அங்கே டெலிபோன் பூத்தில் பணிபுரிந்த ஜெயந்தியை மணமுடித்தான்.
சிவகாசி அச்சகத்தில் பணம் கையாடல் செய்து சென்னை சென்றான்.
கரும்புச்சாறு வியாபாரம் செய்யலாமா என்று கரும்புச்சாறு வியாபாரியிடம் ஆலோசனை கேட்கிறான்.
ஒரு பத்திரிக்கையில் புரூப் ரீடிங் வேலையில் சேர்ந்தான்.
கொலைக் குற்றங்களைப்படித்து பீதி அடைவதாகவும், தானே ஒரு கொலையாளி ஆகிவிடுவேன் என்று பயமாக இருப்பதாகவும் கூறினான்.
பின்னர் நாமக்கல் சென்று நர்சரி துவங்கி செடிகள் வளர்த்தான்.
பினாயில் தயாரித்து பாட்டில்களில் அடைத்து விற்றான்.

"எவராலும் என்னை சாந்தப் படுத்த முடியவில்லை ஒருவேளை சாந்தப்படுவதை தான் விரும்பவில்லையோ என்னவோ", என்றும் "வாழ்க்கை தன்னை மூழ்கடித்துக் கொள்ளவே இல்லை ,தான் ஒரு தக்கையாக எப்போதும் மிதந்தபடியே இருக்கிறேன்" என்று தன் நண்பனுடன்
பேசியிருக்கிறான்.

நாவல் நெடுகிலும் வரும் சில மன வினோதங்கள் சிறப்பாகவும் பாசாங்கின்றியும் பதிவிடப்பட்டிருக்கின்றன.

அவைகளில் சில:
அழகர் வார்டுக்குள் நுழையும்போது சம்பத் இறந்து போயிருந்தான். அவன் மனைவி வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாகி கட்டிலுக்கு அடியில் இருந்த இரண்டு டம்ளர்களை எடுத்து தூக்கு  வாளிக்குள்போட்டு அழுத்தமாக மூடிக்கொண்டிருந்தாள்.

"பாரதியார் கவிதைகள் புத்தகம் வேண்டும். அவர பத்தி கல்லூரி விழாவில் பேச போறேன்" என்று வேறு டிபார்ட்மெண்டில் இருந்து வந்த ஒரு பெண் கேட்கிறாள். மறுநாளே லைப்ரரியில் தேடி கண்டுபிடித்து அவளிடம் சேர்க்கிறான் மாரியப்பன். அப்போதிலிருந்து அவள் தன்னுடைய ஆள் என்று தீவிரமாக நம்ப ஆரம்பிக்கிறான். அவளிடம் காதல் கூறப்போகும் கணத்தையும், கடற்கரை மணலில் கைகோர்த்து நடப்பது போன்றும் கற்பனையில் உருவாக்கி களிக்கிறான்.

மாரியப்பனும் சம்பத்தும் இன்னொரு நண்பனின் ஊருக்குச் செல்கிறார்கள். இரவு நேரம். இளநீரில் ஓட்காவை அடைத்துப் பருகுகிறார்கள். தாமிரபரணி ஆற்றில் கழுத்தளவு நீரில் நின்றபடி கெட்டவார்த்தைகளை சத்தமாக கத்தி மகிழ்கிறார்கள். நடுவே "ங்கொக்காள" என்று சம்பத் அந்த நண்பனை பார்த்து கத்த அவன் கோபம் கொண்டவனாக சம்பத்தை நோக்கி வந்து ஓங்கி அடிக்கிறான். சம்பத் அவனை பதிலுக்கு சரமாரியாக தாக்க துவங்குகிறான்.
_-----------------------------

செட்டில் ஆதல் என்கிற பருவத்தில் சிக்கலில் உழன்ற சகலரும் நெருக்கமாக உணரும் நாவல் இது.











February 21, 2015

கம்யூனிசம் என்பது பாட்டாளிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் குரல்கொடுப்பது; சமத்துவம் பேசும் சித்தாந்தம் என்பதானதாக உங்கள் கருத்துக்கள் இருக்குமெனில் அதை மறுபரிசீலனைக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல் நிராகரிக்கப்படவும் வேண்டுமென உரத்துச் சொல்கிறது இந்த நூல். ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன். கிழக்கு பதிப்பகம்.
 ”மார்க்ஸியத்துடன் ஆக்கப்பூர்வமாக உரையாடவிரும்பியவர்கள், ஒன்று அழித்தொழிக்கப்பட்டார்கள், அல்லது பெரும் ஏமாற்றம் அடைந்தார்கள். பிறரோ தத்தமக்கு ஏற்றவகையில் அதனை மட்டற்ற அதிகாரத்துக்கான ஆயுதமாக மாற்றிக்கொண்டார்கள்”  என்று நூலாசிரியரின் கருத்து, புத்தகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிற கம்யூனிசவரலாற்றுடன் அவ்வளவு துல்லியமாய் பொருந்துகிறது.
சோவியத் ரஷ்யா உருவானது தொடங்கி லெனினும், ஸ்டாலினும் நிகழ்த்திய பல்வேறு மனிதத்தன்மையற்ற  பேரழிவுகளை புத்தகம் பேசுகிறது. கூட்டுப்பண்ணை என்கிற பெயரில் விவசாயிகள் அடிமைப்படுத்தப்பட்டதும், விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சி நகரங்களுக்கும், தொழிற்சாலைகளுக்குமாக செலவழித்ததையும், விவசாயிகள் பஞ்சத்தால் மடிந்துகொண்டிருக்க தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததும், அரசியல் எதிரிகள், சித்தாந்த விரோதிகளை வதைமுகாம்களில் வதைத்ததும், கொன்றுகுவித்ததுமென விரிகிறது. லெனின் காலத்தில் செப்-1918 - ஜன1920 வரை மட்டும் 60,000 அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்ததாம்.
அறிவியலைத் தங்கள் சித்தாந்தத்திற்கு ஏதுவாய் வளைப்பது. சித்தாந்தத்திற்கு எதிரான அறிவியல் கருத்துக்களை மோசடி என்றும், முதலாளித்துவ சதிகள் என்றும் முத்திரைகுத்தி விலக்குவது, அறிவியலாளர்களுக்கோ, கலைஞர்களுக்கோ  கருத்துசுதந்திரம் கடுகளவும் இல்லாத அலங்கோலம்.
ஸ்டாலின் கோரத்தாண்டவத்திற்கு ஒரு சிறிய உதாரணமாக கேய்டின் படுகொலையைச் சொல்லலாம். நாசி ஜெர்மனும், சோவியத்தும்  இணைந்து போலந்தைக் கைப்பற்றியபோது அரசியல் கைதிகளாகப்பிடிக்கப்பட்டவர்கள் சுமாராக 22000 பேர், (திருத்தவேமுடியாத வர்க்கஎதிரிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு) ஒரே நாளில் கூட்டம்கூட்டமாகக் கொன்று கேட்டின் காடுகளில் புதைக்கப்பட்டனர்.
http://en.wikipedia.org/wiki/Katyn_massacre
இதுதவிரவும் மாவோவின் கொடுங்கோன்மை, சீனப்பஞ்சம், க்யூபாவில் கம்யூனிசம் என்று தொடங்கி, இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் சுதந்திரத்துக்கு முன்ன்னும், பின்னும் ரஷ்யாவாலும், சீனாவாலும் இயக்கப்பட்டதையும், வெளிநாட்டு காம்ரேடுகளை வழிமொழிந்த வர்க்கப்பற்றையும், தொழிலுதவி என்கிற பெயரில் ரஷ்யா இந்தியாவில் நிகழ்த்திய சுரண்டல்களையும், கே.ஜி.பி என்கிற பெயரில் ரஷ்யாவின் உளவுஅமைப்பு இந்தியாவில் செயத லீலைகளையும் புத்தகம் விளாக்குகிறது. மார்க்சிஸ்டுகளான மாவோயிஸ்டுகள், உல்ஃபா தீவிரவாதிகளும் பழங்குடியினரின் சமூகபண்பாடுகளையும், ஆன்மீகமரபுகளையும் வேரறுத்துவருவதுவரைக்கும் சொல்லிச்செல்கிறார்.
’சே குவாரா’வை ஆதர்சநாயகனாகக் கொண்டொழுகி டீசர்ட்டுகளில் பதித்தலையும் இளையதலைமுறையினர் கம்யூனிசம் நிகழ்த்திய பேரழிவுகளைத் தெரிந்துகொள்ள அவசியம் படிக்கவேண்டிய நூல்.

June 15, 2010

கவிதைக் கும்மி - கொஞ்சம் பழசு

06/05/2008
முரசறிவிப்பைத் தொடர்ந்து முத்தமிழ்க் கவிஞர்கள் சிலர், "யார் கும்மிப்பவர்கள்" என்கிற தலைப்பில் மஞ்சூராரின் பெருத்த சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலுடன் வருகிறார்கள்.

கென்:
அர்த்தமண்டப அலறல் சீற்றம்
கும்மிருட்டில் சின்சினாட்டி கேவி எழும்
இரவுப் பறவையின் சிறகசைப்பில் கதகதக்கும்
ஆந்தையாய் வெறித்து வள்ளுவம் நெரிக்கும்
முடிவுறாப் பாதைகளின் மருங்கில்
அரசு இசைக்கும் கும்மி
அகிலம் முட்டும்
குகைச் சித்திரங்களில்
குருதி வழியும்

நிலா ரசிகன்:
தலை நனைக்கும் பறவை எச்சத்தில்
செண்பகப்பூ வாடத் துவங்கும்
குறிஞ்சித் தலைவன் கருணையால்
எய்ட்ஸ் விளங்கும்
கும்மி பொருமும்
தொகுப்பில் வந்த கவிதைக் கொத்தை
மொட்டைமாடி சிங்கம் படித்து மகிழ
சுயம் வெளிறி குருதியில் நனையும்
பட்டாசு வெடிக்கும்

திலகபாமா:
வெம்மையில் வேகும் வெற்றிட நீர்ப்பாசியின்
துயரங்களின் கண்ணீர் துளி வெள்ளம்
வெக்கையில் வாடி வெம்மையில் மாயும்
அசோகவனக் கட்டில்கள் படுக்கை அறையெங்கும் அழுதுவடித்தபடி
நீ இளைப்பாற நான் ஆலமரமாய்
நீயோ வேர்களைப் பொசுக்கிச் சிரிக்கிறாய்
(ஏதேதோ எழுதிக்கிட்டு இருக்கேன். தலைப்பு என்னன்னு சரியா சொல்லவே இல்லையே)

லாவண்யா:
நதியலையில் தூங்கும்
நிலவின் ஒளியலையில் உலவும்
தாய்லாந்துத் தொடர்கதை அரசியின்
கும்மிக் கோலங்களை யாரிடம் சேர்க்க
(இல்ல, இது சரியா வரல)

தொடர்கதை அரசியின்
தாய்லாந்துக் கும்மி
நதியலையில் தூங்கி
நிலவைத் தாலாட்டுமா
ஒளியலையில் உலாவுமா
(இதுவும் சரியா வரலையே...........)

ஒளியலையில் தாய்லாந்து
தூக்கத்தில் நதி நிலா
கும்மிகள் தொடர்கதையாய்
(கீதாம்மா, இது சரியா வந்திருக்கா?)