வெண்மேகமாய் பளிச்சிட்டும்
கீறல்களாய் சிதறி மறையும்
மின்னல் உக்கிரம்
பயத்திலோ, அசுவாரசியத்திலோ
கவனிக்கத் தவிர்த்த கணங்கள்
பூசிய வெறுமைச் சாயத்தின் நெடியில்
மிதந்தபடி இருக்கின்றன
எழுதப்படாத டைரிப் பக்கங்கள்
March 31, 2008
கவனம்
March 18, 2008
March 15, 2008
செவிக்கு உணவு - சிறுகதை
செவிக்கு உணவான, இந்த மின் - நவீன உலகின் இணைய அரட்டை சிறுகதையாக வடிவம் பெறுகிறது
- ஹாய்
- சொல்லுடி, எப்படி இருக்க?
- ஒல்லியா இருக்கேன்
- ஆரம்பிச்சிட்டியா
- நீ எப்படி இருக்க?
- ம்ம்ம்ம்ம்....கொஞ்சம் குண்டா தான்
- ஹிஹிஹி
- அப்புறம், இன்னைக்கு பொழுது எப்படி போச்சு?
- வழக்கம் போல தான். சுத்த போர். இன்னைக்கு வேலமெனக்கிட்டு ஒரு சர்வே எடுத்தேன்
- அப்படியா, என்ன சர்வே
- டிரான்ஸ்பரன்சி சர்வே. 80% பெண்கள் பிரா தெரியும்படியாக ஸீ-த்ரூ ப்ளவுஸ் அணிகிறார்கள்
- ரொம்ப அவசியம்
- சர்வேயின் அடுத்த முடிவு என்ன தெரியுமா?
- தெரியல. சொல்லாமலும் விட மாட்ட. சொல்லித் தொலை.
- மீதி 20% பேரும் ஸீ-த்ரூ ப்ளவுஸ் தான் அணிகிறார்கள். ஆனால் பிரா அணிவதில்லை.
- அடக் கருமம் பிடிச்சவளே. பெண்களைப் பற்றி இப்படி ஒரு கேவலமான சர்வே எடுத்த முதல் பெண் நீயாத் தாண்டி இருப்ப.
- சரி, அதை விடு. நீ பாக்க எப்படி இருப்ப?
- கடைசியா என் கிட்டயே உன் சேட்டையக் காட்டப் பாக்கிறியா? எனக்கு உன் அம்மா வயசு. ஞாபகத்தில் வச்சிக்கோ.
- அப்படியா, சரி கேக்கல.
- கோவிச்சிக்கிட்டியா. சும்மா சொன்னேன். ஆண்களுடன் சாட்டும் போது என் அங்கங்கள் பற்றியெல்லாம் பேசத்தான் செய்கிறேன். ஆனால் உன்னுடன் அப்படி பேச தோணல.
- சரி விடுங்க.
- எதுக்கு ‘ங்க’
- நீ தான் அம்மா வயசுன்னு சொன்ன
- சும்மா சொன்னேண்டி. வா, போ ன்னே கூப்பிடு. அது தான் எனக்குப் பிடிச்சிருக்கு.
- சரி
- ஓர்குட்டில் கூட ஏகப்பட்ட லெஸ்போ புரொஃபைல்களைப் பார்க்க முடியுது
- ம்ம்ம்......அதில் பாதிக்கும் மேல் ஆண்கள் உருவாக்கிய போலி புரொஃபைல்கள்.
- ம்ம்ம்....இருக்கும். உனக்கு காதலன் யாரும் இருக்கிறார்களா?
- இல்லை. ஒரே ஒரு காதலி இருக்கிறாள்.
- ஐயையோ.................. உன் கணவனாக ஒரு ஆண் தான் வரமுடியும். ஞாபகத்தில வச்சிக்கோ.
- ஹா ஹா ஹா... அப்படி ஒரு ஞாபகத்தை ரொம்ப காலத்துக்கு முன்னமே தூக்கி எறிந்து விட்டேன்
- என்ன சொல்ற நீ?
- பெண்களுடன் மட்டுமே உறவு என்கிற என் நிலைப்பாட்டைத் தீர்மானமாக்கி விட்டேன்.
- லூசு மாதிரி பேசாத. ஹோமோசெக்சுவாலிட்டி தப்பில்லை தான். அதுக்காக பெண்ணுடன் தான் வாழ்வேன்னு நீ சொல்றது நல்லா இல்ல. இயற்கைக்கு மாறான உறவு தவறானது.
- நானும் இயற்கையிலிருந்து வந்தவள் தான் கண்மணி.
- அப்ப, உன் நிலைப்பாடு சரின்னு நான் ஒத்துக்கிடனுமா?
- அவசியமே இல்லை. ஆனால் ஆண், பெண் என்கிற பாகுபாடுகள் இல்லாதிருந்த அர்த்தநாரீசுவர ஹெர்மாபுரோடைட்டுகளில் இருந்து கிளைத்து வளர்ந்தவர்கள் தாம் ஆண்களும், பெண்களும்.
- என்ன சொல்ற? கொஞ்சம் புரியும்படியா சொல்லு
- ஆரம்பத்தில் எல்லாமே ஆணும், பெண்ணுமான கலவையாகவே இருந்தன. பரிணாம வளர்ச்சியில் பால் பிளவுண்டது. ஆனால் அது முற்றான பிளவாகப் பிரியவில்லை என்பதே உண்மை. ஆணில் பெண்ணும், பெண்ணில் ஆணும் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள்.
- அதனால்???
- அதனால் சுய பால் விழைவும், எதிர் பால் விழைவும், இருபால் விழைவும் சாத்தியமாகிறது. இதில் எந்த இயற்கை மாறாட்டமும் இல்லை.
- ஒரே குழப்பமா இருக்கு. நீ சொல்வது சரியா, தப்பான்னு புரியல. ஆனா, இந்த சமுதாயம் என்ன சொல்லும்? உன்னைக் கேவலமாகப் பார்க்காதா?
- அது பற்றிய பெரிய கவலை எதுவும் இல்லை. நானும் ஒரு சமுதாயப் பிரஜை தான். என் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்கிற எண்ணமும் எனக்கு இருக்கிறது.
- ஆண்களைப் பார்த்தால் உனக்கு நிஜமாகவே எதுவும் தோணாதா?
- ஊகூம். எதுவும் தோணாது. ஆரம்பத்தில் என்னுடைய இந்த நிலைப்பாடு குறித்த குற்றவுணர்வுகளில் தவித்தேன். இப்போது அந்த நிலையைத் தாண்டிவிட்டேன்.
- ஆனால் உன்னைப் போன்றவர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு தானே
- உண்மை தான். சுயபால் விரும்பிகள் பலரும் சமுதாய விதிமுறைகளுக்காக செயற்கையாகத் தங்களின் உணர்வுகளை மழுங்கடிக்கிறார்கள். ரொம்ப சிலரே என்னைப் போல பிடிவாதமாய் இருக்கிறோம்.சரி அதை விடு, உன் ஆன் லைன் காதல்கள் பற்றி சொல்லு.
- என்ன சொல்ல, என் மெசெஞ்சரில் எப்பவும் குறைந்தது 10 ஆண்கள் இருப்பார்கள். அடிக்கடி அவர்களை நீக்குவதையும், புதிதாய் வேறு நபர்களைச் சேர்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
- எதற்காக நீக்குகிறாய்?
- எல்லாருக்கும் ‘அது’ தான் வேணுமாம்
- ‘அது’ ன்னா?
- என் வாயிலிருந்து அந்த வார்த்தையைப் புடுங்குவதில் உனக்கு என்ன சந்தோஷம். சரி சொல்லுறேன். செக்ஸ்.
- கேட்டா கொடுக்க வேண்டியது தானே
- அய்யோடா, எனக்கு பேச்சே போதும் தாயே.
- உனக்கு பயம்
- அதுவும் உண்மை தான். ஆனால் உடலைப் பகிர்வதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடும் இல்லை. இந்த விசயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
- ஆம். உறவு கொள்வதில் பெரிய சிக்கல்கள் இல்லை தான். ஆனால் சேர்ந்து வாழவேண்டும் என்கிற எண்ணம் பரிகாசத்திற்கு உள்ளாகிறது.
- ம்ம்ம்ம்.....
- உன் கணவர் என்ன செய்கிறார்?
- ஆடிட்டர்
- அன்போடு கவனித்துக் கொள்வாரா?
- தெரியவில்லை. எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். ஆனால் உடலை மட்டுமே அவருக்கு தர முடிகிறது. மனதை அல்ல. மனதளவில் அவரை ஏற்கனவே விவாகரத்து செய்து விட்டேன்.
- சும்மா கதை விடாதே. திருமண வாழ்க்கை சந்திக்கும் சலிப்பை வேறு மாதிரியாகச் சொல்கிறாய்.
- அப்படி இல்லை. திருமண வாழ்வுத் துவக்கமே எனக்கு பெரிய அதிர்ச்சியாகத் தான் ஆரம்பித்தது. அடக்கி ஆள முயன்ற மாமியார், சாவித்துவாரம் வழியாக நான் குளிப்பதை வேடிக்கை பார்த்த மாமனார். பெரிய கேவலம்.
- உன் கணவரிடம் முறையிட்டு இருக்க வேண்டியது தானே
- முறையீடா?. தூங்கும் மனைவியைப் புணரும் கணவனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?
- ம்ம்ம்....... பிணங்களைப் புணருபவர்களே இருக்கிறார்கள். முன்னொரு காலத்தில் புதைத்த பிணத்தை தோண்டி எடுத்து புணருவதற்கென்றே ஒரு பரம்பரையே இருந்ததாம். அர்த்தசாஸ்திரத்தில் இதைப் பற்றிய குறிப்பு இருக்கிறதாம். தமிழ் சமுதாயத்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.
- அந்த மாதிரியான ஒரு கணத்தில் பிறக்கும் எரிச்சல் இருக்கிறதே. அதை எப்படிச் சொல்றதுன்னு புரியல.
- அதிகார வெளியில் அடக்கப்பட்ட உடலின்பம் தன் ஆதிக்கம் செல்லுபடியாகும் இடத்தில் முறைகேடாகப் பிரயோகிக்கப்படுகிறது. சரி, விடு விடு.
- அப்புறம் தனிக்குடித்தனம். குழந்தைகளும் இப்போது வெளியூரில் கல்லூரியில் படிக்கிறார்கள். நிறைய தனிமை கிடைக்கிறது.
- ம்ம்ம்.......
- சில நேரம் எரிச்சலாக இருக்கும். நான் அனுபவித்த பழைய கொடுமைகளுக்கெல்லாம் எதிர்வினையாகத் தான் இப்படி அசிங்கமாக செக்ஸ் சாட் செய்து கொண்டிருக்கிறேனோ என்று.
- அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு பிடித்த விசயத்தை நீ செய்கிறாய். அவ்வளவு தான். உன் தனிமையை மறக்கடிக்கும் பொழுதுபோக்கு என்று நினைத்துக் கொள்.
- ம்ம்ம்....ஆனால் நிலையான ஒரு நட்பைப் பெற முடிவதில்லை. முன்னமே சொன்ன மாதிரி அடிக்கடி ஆட்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.
- உண்மை தான். அந்தரங்கம் தீவிரமாய் அலசப்படுவதனால் செக்ஸ் சாட் சீக்கிரத்திலேயே வெறுத்து விடுகிறது போல. தவிரவும் எந்த இறுக்கமான உறவுத் தொடர்ச்சியும் இங்கே அவசியமில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
- ம்ம்ம்.......
- சாருநிவேதிதாவின் ராஸலீலா நாவலில் விதவிதமான செக்ஸ் சாட்டுகளின் சுவாரஸ்யமான வர்ணனைகள் இருக்கிறது. ஆனால் எல்லாமும் ஒரு கணத்தில் படிப்படியாகக் குறைந்து நின்று போகிறது.
- ஓ...அப்படியா. இதை விட்டு விட வேண்டும் என்று சொல்கிறாரா?
- அப்படி இல்லை. எதிர்காலம் பற்றி குழப்பிக் கொள்ளாமல் அந்த கணத்தின் இன்பத்தை அந்நேரத்தில் அனுபவிப்பது என்று கூட கொள்ளலாம்.
- என்னவோ போ. ஒன்னுமே புரியல.
- செக்ஸைப் போலவே செக்ஸ் சாட்டும் அதன் உச்சத்தை அடைந்து பின் அமைதிக்கு திரும்புகிறது போல.
BUZZ
எங்க போன?
- ஒரு ஆண் நண்பன் சாட்டுக்கு வந்திருக்கான். அவனுடன் கொஞ்சம் அளவளாவிக்கிட்டு இருந்தேன்
- சரி, கண்டினியூ பண்ணு. நானும் கிளம்புறேன். தூக்கம் வருது
- ஓகே. குட் நைட். பை.
- பை.
March 01, 2008
தீண்டும் இன்பம் - சிறுகதை
மீதமிருந்த கால் பாட்டில் பீரையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டு காராபூந்தியை மேய ஆரம்பித்தான் வேந்தன். வேந்தனின் ரெண்டாவது பாட்டில் மூடியைப் பல்லால் கடித்து திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் ரகு.
‘நண்பா, இன்னைக்கு மதுரைக்குப் போய்ட்டு வரும் போது பஸ்ஸில ”மூன்றாம் பிறை” படம் போட்டானுங்க’ – வேந்தன்.
‘ம்ம்ம்.....’ என்று சொல்லியபடி பாட்டிலைத் திறந்ததும் அதிலிருந்து பொங்கிய பீருக்குள் ஒரு கடலைப் பருப்பைப் போட்டு அமைதியாக்கினான் ரகு.
‘ ”பொன்மேனி உருகுதே, என் ஆசை பெருகுதே” அந்தப் பாட்டு பாத்திருக்கியா’
‘ம், பாத்திருக்கேன். ஆனா பாத்து ரொம்ப நாள் ஆச்சு. அந்தப் பாட்டுக்கு என்ன?’
‘அந்தப் பாட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சில்க் ஸ்மிதாவோட உதட்டுக்கு ஒரு க்ளோசப்-ஷாட் வச்சிருக்கான் பாரு. ஆஹா, அட்டகாசம்டா. அப்படியே சொக்கிட்டேன். கவர்ச்சின்னு எதைஎதையோ சொல்றானுங்க. உண்மையான கவர்ச்சியை இன்னைக்கு தாண்டா பாத்தேன். அந்த உதடுகள் ரெண்டும் ஒட்டாமல் லேசா திறந்திருக்கு. அந்த கேப்ல மேல் வரிசைப் பல் ரெண்டு மட்டும் லேசா தெரியுது. அய்...யோ’ தலையை லேசாக உலுக்கிக் கொள்கிறான். ‘தமிழ் சினிமாவோட ஒரே கவர்ச்சிக் கன்னி சில்க் தான்டா’
‘இதுவரைக்கும் கவனிச்சு பாத்ததில்ல. அடுத்தவாட்டி எப்பவாவது டிவியில போட்டா பாக்குறேன். உன் ரசனையோட லட்சணத்த’
‘டிவியில என்னைக்கு போட, நீ என்னைக்கு பாக்க. அதான் உலக குப்பத் தொட்டி இருக்குதே’
‘என்னடா லூசு, உளர்ற’
‘இன்டெர்நெட்டைச் சொன்னேன். ஒரு நிமிஷத்தில தேடிரலாம்’
‘ஓ....சரி சரி. பாக்குறேன்’
‘ரெண்டாவது பாட்டில் பீர் ஓடுது’
‘அதுக்கென்னடா இப்போ’
‘அந்தரங்கம் அம்பலமாகும் நேரம்’
‘இவன் ஒருத்தண்டா. உலகத்திலயே பீர் அடிச்சிட்டு உளர்ற ஒருத்தன் நீயாத் தான் இருப்ப’
‘சரி, நான் உளரல. நீ இப்போ உன் காதல் கதையெல்லாம் வரிசையா சொல்வியாம். நான் கேட்டுக்கிட்டே மட்டையாவேனாம். சொல்லு, சொல்லு’
‘அது ஒரு கேவலமான கதைடா’
‘டேய், காதல்னாலே கேவலம் தாண்டா. சும்மா சொல்லு. கேவலக் கதை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’
‘சும்மா வெறுப்பேத்தினேன்னா அப்புறம் சொல்ல மாட்டேன்’
‘கோவிச்சிக்காத மச்சி. சொல்லு சொல்லு’
‘என் கதைய இதுவரைக்கும் யார் கிட்ட்யும் சொன்னதில்ல’ என்கிற பொய்யை 10 வது தடவையாகச் சொல்லி தொடர்ந்தான். ‘உன் கிட்ட மட்டும் தான் சொல்ல போறேன். யார் கிட்டயும் சொல்லீராத, சரியா’
(ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா, இந்த மாதிரி ஒரு டயலாக்கை விடாம, கதையை ஆரம்பிக்க மாட்டானுங்க. இருந்தாலும் கதை கேட்கும் ஆர்வத்தில் இருந்த வேந்தன், தொண்டை வரைக்கும் வந்த நக்கலை அடக்கியபடி) ‘சொல்லல, சொல்லு’ என்றான்.
‘நான் அப்போ படிச்சு முடிச்சிட்டு கோயமுத்தூர்ல ஒரு கம்பெனியில சைட் இன்ஞீனியரா சேந்திருந்தேன். அப்போ ஒரு லேடீஸ் காலேஜ்ல ஒரு கேண்டீன் கட்டட வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு. எனக்கு அங்க தான் வேலை. ஒரு நாள் நான் வேலை முடிச்சு கிளம்பும் போது, ஒரு பொண்ணு என் சைக்கிளை வழிமறிச்சா. உங்க பேரு என்னன்னு கேட்டா. சொன்னேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா, அப்படின்னு கேட்டா. யோசிக்கக் கூட நேரமில்லை. அந்த மாதிரி ஒரு கிடுக்குப் பிடி.
யாரு நீங்க? இப்படி திடுதிப்புன்னு வந்து பேசுறது நல்லா இல்லைங்க, அப்படின்னேன்.
என் பேரு ராணி. தேர்ட் இயர் பிசிக்ஸ் படிக்கிறேன். யோசிச்சி நல்ல முடிவா சொல்லுங்க. நாளைக்கு இதே இடத்தில மீட் பண்ணுவோம் னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு நடந்து போக ஆரம்பிச்சிட்டா. இப்படித்தான் எங்க காதல் ஆரம்பிச்சது.
‘மச்சி, கலக்கல் கதையா இருக்கே. ஊமையா இருக்கிறவனுங்க கிட்ட தான் சூப்பர் சூப்பர் கதையா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அது நிஜம் தான் போலருக்கு.’
‘குறுக்க பேசாத. அப்புறம் கதைய அப்படியே நிப்பாட்டிருவேன்’
‘சரி சரி பேசல. சொல்லு’
‘அவ பெரிய அழகியும் இல்ல. ரொம்ப அசிங்கமாவும் இல்ல. மறுநாள் சரி ன்னு சொல்லிட்டேன். அவ ஹாஸ்டல்ல தான் தங்கி படிச்சிக்கிட்டு இருந்தா. அப்புறம் அவ ஹாஸ்டல் நம்பருக்கு போன் பேசியே என் சம்பளப் பணம் எல்லாம் வீணாப் போச்சு. ஒரு நாள் ஒரே நேரத்தில் 200 ரூபாய்க்கு பேசினேன். அப்போ என் மாச சம்பளமே 2000 ரூபா தான். இப்போ நினச்சு பாத்தா எரிச்சலா இருக்கு.
ஒரு நாள் சினிமாவுக்கு போவோம்னு கூப்பிட்டா. எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. தெரியாத ஊர் தானேன்னு சரின்னு சொல்லி அவளைக் கூட்டிக்கிட்டு போனேன். கூட்டமில்லாத தியேட்டர். கடைசி வரிசையில் ஒரு ஓரமா உக்காந்திருக்கோம். ரெண்டு பேரோட கைகளும் உரசுது. ஏதோ ஒன்னு எங்க ரெண்டு பேர் கைகளுக்கும் ஊடே ஊர்றது மாதிரி இருந்துச்சு. எப்படி ஆரம்பிக்கன்னு நான் குழம்பிக்கிட்டு இருந்தேன். அவளும் அதே மாதிரி குழம்பிக்கிட்டு இருந்திருப்பான்னு நினைக்கிறேன். அப்போ மெதுவா என் தொடை மேல கைய வச்சா. பத்தி நிமிஷமாவது அப்படியே வச்சிருந்திருப்பா. அப்புறம் சுண்டு விரலை வச்சி சின்னதும் பெரிசுமா வட்டம் போட ஆரம்பிச்சா. அப்புறம் நானும் மெதுவா என் கையை எடுத்து அவ தோள் மேல போட்டேன்’
‘டேய் மச்சி, என்னடா சொல்ற. கேக்கும் போதே எனக்கு ஜிவ்வுங்குதே. அப்புறம் என்னடா ஆச்சு’
‘வாய ரொம்ப திறக்காத. அந்த மாதிரி 10 படமாவது பாத்திருப்போம். சில நேரம் தியேட்டரில் கூட்டம் இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் எரிச்சலா இருக்கும். படம் தொடங்குற வரைக்கும் யாரையாச்சும் காட்டி, ”அந்த ஆளு நம்மளையே பாக்குறான்” னு சொல்லுவா. எனக்கு எரிச்சலா இருக்கும். படம் பாத்துட்டு போகும் போது மனசு வெறுமையா இருக்கிற மாதிரி இருக்கும். நாம ஏன் இப்படி அசிங்கமா நடந்துக்கிறோம்னு தோணும். இனிமே தியேட்டருக்கு வரக் கூடாதுன்னு நினைப்பேன். ஆனா அடுத்த வாரமே ஆஜர் ஆயிடுவோம். வெக்கத்த விட்டு சொல்றேன்டா, ஒரு கட்டத்தில அவ உடம்பில என் கை படாத இடமே இல்லைங்கிற மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கும் அதே மாதிரி.
எங்களுக்குள்ள இருந்தது வெறும் காமம் மட்டும் தானாடா? நாங்க காதல் பண்றதா பேசிக்கிட்டதெல்லாம் வெறும் பொய்யா?’
‘ம்....அப்படியெல்லாம் ஒன்னுமில்ல நண்பா. உனக்கு வாய்ப்பு கிடச்சது. யூஸ் பண்ணியிருக்க. வாய்ப்பு கிடைக்காம ஒழுக்கம் பேசுறவங்க தான் நிறையப் பேரு இருக்காங்க’
‘அவளுக்கு லோக்கல்ல ஒரு பாட்டி வீடு இருந்துச்சு. சனி, ஞாயிறு பெரும்பாலும் அங்க தான் இருப்பா. ஒரு நாள் எனக்கு போன் பண்ணி அவங்க பாட்டி, பக்கத்து ஊர்ல ஒரு கோயிலுக்குப் போயிருக்காங்கன்னும், நைட் தான் வருவாங்கன்னும் சொல்லி என்னை அந்த வீட்டுக்கு வரச் சொன்னா. வந்து என்ன செய்யன்னு கேட்டேன். சும்மா பேசிக்கிட்டு இருப்போம்னு சொன்னா.
கிளம்பினேன். போகிற வழியெல்லாம் என்னென்னவோ சிந்தனை. சோஃபாவில் உட்காரச் சொல்லுவாளா? டீ ஏதாச்சும் தருவாளா? டீ குடிக்கிற சாக்கில் பக்கத்தில் வந்து உக்காருவாளா? எப்படி ஆரம்பிக்கிறது. பயமா வேற இருக்கு. யாராச்சும் வந்துட்டா.
காலிங் பெல்லை அழுத்துனேன். முன்னாடி இருந்த ரூம்ல இருந்த ஒரு ஜன்னல் திறந்துச்சு. அவ தலை மட்டும் தெரிஞ்சது.
உள்ள வா, கதவு திறந்திருக்குன்னு சொன்னா.மெதுவா கதவைத் திறந்து உள்ள போனேன். ஹால்ல யாருமே இல்ல. டிவி மட்டும் தனியா ஓடிக்கிட்டு இருந்துச்சு.
”ராணி” ன்னு மெதுவா கூப்பிட்டேன். பதில் இல்ல.
அந்த ஜன்னல் இருந்த ரூமுக்குள்ள பாத்தேன். சொல்லவே ரொம்ப அசிங்கமா இருக்குதுடா. பிராவும், ஜட்டியும் மட்டும் போட்டுக்கிட்டு கட்டில்ல குப்புறப்படுத்திருந்தாடா. ஒரு செகண்டு என்ன பண்றதுன்னே புரியல. உடம்பெல்லாம் பதறுது. அப்படியே அந்த வீட்ட விட்டு வெளியேறிட்டேன்.
அன்னைக்கு நைட்டெல்லாம் தூக்கமே இல்ல. மறுபடியும் மறுபடியும் அதே நினைப்பு’
‘நீ என்ன நினைச்சு போனியோ, அதுக்காகத் தான் அந்தப் பொண்ணும் ரெடியா இருந்திருக்கா. கொஞ்சம் வெளிப்படையா இருந்ததால, நீ பயந்துட்ட. அப்புறம் என்ன ஆச்சு’
‘மறுநாள் போன் பண்ணினா. ”ரொம்ப சாரி. அந்த மாதிரி நான் நடந்திருக்கக் கூடாது” அப்படின்னு சொன்னா.
“நீயெல்லாம் ஒரு தமிழ் பொண்ணா. நினைச்சாலே அசிங்கமா இருக்கு. ஏன் உன் புத்தி இப்படி போகுது” அப்படின்னு பெரிய ஒழுக்கவான் மாதிரி பேசினேன்.
அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு பெருந்தன்மையா மன்னிச்சிட்டேன்னு சொன்னேன்.
அப்புறம் கொஞ்ச கொஞ்சமா எங்களுக்குள்ள பேச்சு குறைய ஆரம்பிச்சது. தியேட்டருக்குப் போறதும் நின்னு போச்சு.
ஒரு நாள் போன் பண்ணி “எங்கப்பா மாப்பிள்ளை பாத்து வச்சிருக்காரு. என்ன பண்றதுன்னு புரியல. அப்பா மனசை நோகடிக்கவும் எனக்கு பயமாயிருக்கு. நமக்குள்ள ஜாதிப் பிரச்சனை வேற இருக்கு” அப்படின்னு புலம்பினா.
”நான் உன்னை மறந்துடணும்” அப்படித்தானே. இதைக் கேக்கும் போது எனக்கு தொண்டைய அடைக்கிற மாதிரி இருந்துச்சு.
“நான் அதுக்காக சொல்லல” அப்படின்னா. போனை கட் பண்ணினேன்.
அதுக்கப்புறம் நாலு தடவை போன்ல பேசினா. ஒரு தடவை நேர்ல பாத்து பேசுனோம். அத்தோட எல்லாம் முடிஞ்சு போச்சு. கொஞ்ச நாள் லூசு மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் இங்க திருச்சிக்கு இப்போ வேலை பாக்கிற இந்த கம்பெனிக்கு மாறி வந்தேன். மூணு வருஷம் ஓடிடுச்சு. புள்ள குட்டியோட சந்தோஷமா இருப்பான்னு நினைக்கிறேன்.’
‘சரி விடு மச்சி’ ரகுவின் தோளில் ஆதரவாய் தட்டினான்.
காலி பீர் பாட்டிலகள் ஓரமாய் ஒதுங்கி இருந்தது. வேந்தன் தரையில் படுத்தபடி ஓடுகிற ஃபேனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். கொஞ்ச நேரத்துக்கு அறையே அமைதியாக இருந்தது.
‘பொன் மேனி.......ஹ்ஹா....உருகுதே,
என் ஆசை.......ஹ்ம்ம்.....பெகுகுதே’ வேந்தன் அடிக்குரலில் பாட ஆரம்பித்தான். ரகுவின் மனதில் அந்த படுக்கையறைக் காட்சி ‘ஈ’ மாதிரி மொய்த்துக் கொண்டே இருந்தது.
