நான் அப்போது பூனையாக இருந்தேன். மதில்களின் மேலேறித் தாவித் திரிந்தேன். மியாவ் மியாவ் என்று சப்தித்தபடி ஊரை வலம் வந்தேன். பால் பாத்திரங்களை உருட்டுவதே என் விருப்பப் பொழுதுபோக்காக இருந்தது.
கொஞ்ச நாட்களில் வீடு மட்டுமே என் உலகமானது. வீட்டுக்குள் வீடு கட்டி விளையாட ஆரம்பித்தேன். உலகம் சுருங்கி என் சன்னலுக்குள் ஒளிந்து கொண்ட அந்த ஒரு நாளில் என் தூக்கத்தில் ஒரு விபரீதம் நடந்து முடிந்திருந்தது. என் வால் துண்டிக்கப்பட்டிருந்தது. குருதி ஒழுகிய வேதனையை விட, 'வாலில்லா பூனை' என்று பலர் பேசிய கேலி அதிகமாய் வருத்த, எங்கிருந்தோ விளைந்த விபரித கற்பனையில் என் பெயரை 'புனை' என்று மாற்ற முடிவு செய்தேன்.
அப்போது அவ்வழியாக வந்த பெரிய சிவந்த கண்களைக் கொண்ட 'வு' என்று அழைக்கப்பட்ட நரியனின் மேல் எனக்கு காதல் பிறந்தது. 'வு' அன்பானவனாகத் தெரிந்தான். அவனுடைய பைக்கில் என்னை அமர்த்தி ஊர் சுற்றிக் காட்டினான். திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்றான். பாப்கார்ன் வாங்கித் தந்தான்.
ஒரு மாலை நேரத்தில் மழையின் முடிவில் இலைகளிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்த வேளையில், அவனுடைய மிருதுவான கைகளால் என் முதுகை வருடியபடி இருந்தான். நான் கண்களை மூடிய கிறக்கத்தில் இருந்தேன். "திருமணம் முடிந்ததும் உன் பெயருக்குப் பின்னால் என் பெயரையும் இணைத்து 'புனைவு' என்று எழுதுவாயா?" என்று கேட்டான். கிறக்கம் மறைந்து முதுகு கனக்க ஆரம்பித்தது. வு தான் என் வாலை வெட்டியவனோ என்று முதல் முறையாக சந்தேகம் பிறந்தது. தரையைப் பார்த்தபடி,"ம்.....எழுதுவேன்" என்றேன். என் கன்னத்தில் கை வைத்து என் தலையை உயர்த்தினான். என் மனதில் முணுமுணுத்த வார்த்தைகளை, என் கண்களின் வழியாக அவன் படித்திருந்திருக்கக் கூடும். அப்படி என்ன முணுமுணுத்தேன். "நரியனே, உன்னில் மட்டும் பிணைக்க அல்ல இந்த வாழ்வு, உலகத்தோடு".
என் கண்களைக் காணத் திராணி இல்லாமல் நரியன் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அன்றிரவு துண்டிக்கப்பட்ட இடத்தில் என் வால் முளைக்க ஆரம்பித்திருந்தது. மறுநாள் 'மியாவ், மியாவ்' என்று சப்தித்தபடி உலகை வலம் வர ஆரம்பித்தேன்

No comments:
Post a Comment