December 10, 2007

பெர்வர்ட் - சிறுகதை

பொதுவாகவே சம்பள நாள் என்றாலே ஒரு பரபரப்பு, எதிர்பார்ப்பு இருக்கும். எனக்கு கொஞ்சம் உதறலாக இருந்தது. இன்றையோடு இந்த ஆபிஸூக்கு முழுக்கு போட வேண்டும். சொல்லிவிட்டு நிற்பதா?, சொல்லாமலேயே நின்று விடுவதா? அது தான் இப்போதைய குழப்பம்.
சுமாராக ஒன்றே முக்கால் வருடத்தில் 5 அலுவலகங்களில் பணியாற்றிய பெரிய அனுபவஸ்தன் நான். இந்த ஆபிஸில் சேர்ந்து வாங்கப்போகும் முதலும் கடைசியுமான சம்பளத்திற்காகத்தான் வெயிட்டிங்.
'ஏன் வெளியேற வேண்டும்'னு கேட்கிறீர்களா. இந்த கிறுக்குப் பய கம்பெனியில மனுஷன் வேலை பார்ப்பானா.

"டேய்.. சும்மா நிப்பாட்றா.... உன் லட்சணம் தான் தெரியுதே. அடிக்கடி ஆபிஸ் மாறும் உனக்கு என்னடா யோக்கிதை இருக்கு, இப்படி பேச" அப்படின்னு தானே கேக்குறீங்க. இருங்க, மிச்சத்தையும் சொல்லி முடிச்சிடுறேன். அதுக்கப்புறம், உலகத்தில் இருக்கும் கெட்டவார்த்தையை எல்லாம் உபயோகப்படுத்தி, நீங்களே அந்தக் கிறுக்கனை அர்ச்சித்தாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


அடடா, இந்த நேரத்தில் இவள் எதுக்கு இங்கே வந்தாள். வந்தவள், சுசீலா. நான் இந்த ஆபிஸில் சேர்ந்த முதல் நாளில், லஞ்ச் நேரத்தில் என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு ஆபிஸை விட்டு வெளியேறியவள். இப்போ எதுக்கு வந்திருக்கிறாள். ஒருவேளை, சம்பளம் கொடுக்கிறேன் பேர்வழி ன்னு, இந்தப் பெரிசு தான் போன் பண்ணி வரச் சொல்லியிருக்கும்.

ஹாய், சொல்லிவிட்டு விசிட்டர் சேரில் அமர்ந்தாள். கேபினில் இருந்து அழைப்பு மணி ஒலி கேட்டது. உள்ளே சென்றேன். 'சுசீலாவ, உள்ள வரச் சொல்லுப்பா' தலையைக் கூட நிமிர்த்த நேரமில்லாத பெரிசு சொன்னது. 'சுசீலா... ஒரு பா...ர்சல்' என்று மனதுக்குள் சொல்லியபடி ஒரு சர்வர் மாதிரி வெளியே வந்தேன். சுசீலா கேபினுக்கிள் நுழைந்தாள். நான் என் இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

சே..... நடுவில இந்த சுசீலா வந்து, நல்லா போய்க்கிட்டு இருந்த கதையை டிஸ்டர்ப் பண்ணிட்டாளே.

சரி. இது ஒரு கிறுக்குப் பய கம்பெனிங்கிறத முதல்ல உங்களுக்கு நிரூபிக்கணும், இல்லையா.

முதல் நாள், பெரிசு ஆபிஸூக்குள் நுழையும் போது, நான் என் மானிட்டரில் இருந்து கண்ணை விலக்கி, ரிவால்விங் சேரில் பின்புறமாக சுழன்று, "ஹலோ சார்" சொன்னேன்.
"உனக்கு புத்தி இருக்குதா. ஒரு பாஸ் கிட்ட இப்படி தான் மரியாதையில்லாம நடப்பியா. எந்திரிச்சு நின்னு 'குட் மார்னிங்' சொல்லனும், புரியுதா"
"சரி" என்றேன்.

அன்றைக்கு மதியான சாப்பாட்டு நேரத்தில் தான், சுசீலா என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அவள் சொன்ன வார்த்தைகள் அப்படியே என் காதுகளில் ஒலித்தபடியே இருக்கின்றன. சுசீலாவுக்கு என் வயது தான் இருக்கும்,22. பெரிசு அரை சதத்தைக் கடந்திருந்தது.

-"ஏன் வெளியேறப் போறீங்க"
- "இந்த பாஸ், கொஞ்சம் மோசம். அவருக்கு அக்கவுன்ட்ஸ் பாக்க ஆள் யாரும் தேவையில்ல. அவருக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணுமாம், அதுக்கு தான் என்னை அப்பாயிண்ட் பண்ணியிருக்கார். நான் சேர்ந்த முதல் நாளிலேயே இந்த விஷயத்தை என் கிட்ட சொன்னார்"
- "நீங்க சேர்ந்து எத்தனை நாள் ஆகுது"
-"அஞ்சு நாள் ஆகுது"
-"முதல் நாளே வெளியேறி இருந்திருக்கலாமே"
-"எனக்கு அவரோட வெளிப்படையான பேச்சு பிடிச்சிருந்தது. என்னோட பணத்தேவைகளையும் தீர்க்கிறேன்னு சொன்னாரு. ஆனால், பணத்துக்காக இல்லாட்டியும் அவரோட பேச்சுக்காக தான் இவ்ளோ நாள் வந்தேன்"
-"சரி, பிறகு இப்போ, எதுக்கு போறேன்னு சொல்றீங்க"
- "நான் செய்யுறது தப்போன்னு நினைக்கத் தோணுது"
-"அவர் உங்க கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினாரா?"
-"அப்படியெல்லாம் நடக்கல. பேசிக்கிட்டு இருப்பார். அவ்ளோ தான். சரி, நான் கிளம்புறேன்"
-"ஓகே"

சாயந்திரம் வந்த பெரிசு, இந்த விஷயத்தைக் கேட்டுட்டு, ரெண்டு நாள் மூஞ்சியத் தொங்கப் போட்டுக்கிட்டே அலைஞ்சது. ஏன் இப்படி அலையுதுகள்? காமக் காட்டுமிராண்டி. 'சே...சே.... அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. காமம், காதல் இதெல்லாம் இயல்பானது, வயசு வித்தியாசம் இதெல்லாம் இதுக்கு கிடையாது' அப்படின்னு சொல்றீங்களா? அதுவும் உண்மையாக இருக்கலாம். சரி அதை விடுங்க. அடுத்த விஷயத்துக்கு வருவோம்.

ஒரு நாள் பெருசு கேபின்ல, டிவி ஓடிக்கிட்டு இருந்தது. அது டிவி இல்லை, CLOSED CIRCUIT TELEVISION ங்கிறது அப்போ தான் புரிஞ்சது. இந்த ஆபிஸ் பத்தி முதல்ல நீங்க புரிஞ்சிக்கனும். பெருசு கேபின். அப்புறம் நான் இருக்கும் அறை - ரிசப்ஷனா, வேலை பார்க்கும் இடமான்னு புரியாத ஒரு ரெண்டுங்கட்டான் இடம், வாசலில் நுழைந்தவுடன் ஏழு படி ஏறி நான் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு வரவேண்டும். அதற்கு பக்கத்திலேயே ஏழு படி கீழே இறங்கிச் செல்லும். அந்த இடம் ஒரு குகை மாதிரி இருக்கும். அந்தக் குகைக்குள்ளே ஒரு நிம்மதியான இடம் இருந்தது. அது ஒரு சின்ன டாய்லெட். ஒரு ரெண்டு நிமிஷம் பெரிசு கண்ணிலிருந்து தப்புவதே பெரிய சொர்க்கமாக இருந்தது.

என் அறை, மற்றும் அந்தக் குகை இரண்டிலுமாகச் சேர்த்து ஏழு பேர் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் ஒருத்தன் மட்டும் தான் வேலை பார்க்கிறேன். வாழ்ந்து கெட்ட ஆபிஸ்.
என் அறையிலும், குகையிலும் ஒவ்வொரு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. ஒருத்தனைக் கண்காணிக்க ரெண்டு கேமராவா?. சொன்னால் நம்ப மாட்டீர்கள், அந்த CCTV எப்போதும் இயங்கியபடியே தான் இருந்தது. டாய்லெட்டில் கேமரா இல்லை, என்பதை உறுதி செய்த பிறகே நிம்மதியாக இருந்தது.

அப்புறம் எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக ரெண்டு மணி நேரமாவது அட்வைஸ் மழை கிடைக்கும்.
"உன் வயசு என் அனுபவம்"
அப்ப எனக்கு ஒரு வயசு தான் ஆகுதுன்னு சொல்லனும்னு நினைப்பேன்.

சுசீலா உள்ளே போய் அரை மணி நேரமாவது ஆகியிருக்கும். உள்ளே என்ன நடக்குதுங்கிறதைப் பார்க்க நமக்கு ஒரு CCTV இருந்தா எப்படியிருக்கும்.
வெளியே வந்தாள். எனக்கு ஒரு BYE சொல்லிவிட்டு புறப்பட்டாள்.
அழைப்புமணி ஒலித்தது. இதைக் கண்டுபிடிச்சவனைச் செருப்பைக் கழட்டி அடித்தால் என்னவென்று தோன்றியது. உள்ளே நுழைந்தேன்.

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத

மெல்லிய சப்தம் டேப்ரிக்கார்டர் வழியாக வழிந்து கொண்டிருந்தது. காயத்ரி மந்திரம் கேட்டால், சகல துன்பங்களும் நீங்குமாமே. நம்ம பெரிசுக்கு துன்பம் நீங்கின வழியைக் காணோம். தினமும் இதைக் கேட்டுக்கிட்டே தான் இருக்குது. தெரியாமல் தான் கேட்கிறேன். 24 மணி நேரமும், ஒரே மந்திரத்தைக் கேட்கும் மனிதர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?. அதீத சகிப்புத்தன்மை கொண்ட ஞாநி ஆக இருக்க வேண்டும் அல்லது மழுங்கிய கூமுட்டையாக இருக்க வேண்டும்.

வேலையை விடப்போறேன்னு சொல்லவா? வேண்டாமா?. பெரிசு, பணத்தை இரண்டு முறை எண்ணிவிட்டு, என்னுடைய கண்ணுக்கு முன்னால் பணத்தை ஆட்டியபடி அட்வைஸூக்குள் நுழைந்து கொண்டிருந்தது. இது ஒரு கேவலமான டிரிக். நிறைய இடத்தில் இந்த மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறேன். பணம் கை மாறியது.
-"சார். இன்னையோட ஆபிஸிலிருந்து நிக்கப் போறேன்"
-"என்ன சொல்ற நீ. இதெல்லாம் ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே சொல்லனும். திடீர்னு நிக்கிறேன்னா, என்னப்பா அர்த்தம். பொறுப்பா இருக்கனும்பா. அந்தக் காலத்தில நான் ......................................................................................................................"
-"நிப்பாட்றா. பொம்பளப் பொறுக்கி"

வெளியேறி விட்டேன். தவறாகத்தான் பேசிவிட்டோமோ. மனசு கனமாக இருந்தது. பஸ் ஸ்டாப்பில் சுசீலா நின்று கொண்டிருக்கிறாள். அவளருகே சென்றேன். புன்னகைத்தாள்.

- "சம்பளம் கொடுத்தாரா?"
-"ஆமாம்"
ஐந்து நாள் வேலை பார்த்தவளுக்கு, கூப்பிட்டு அனுப்பி சம்பளம் கொடுக்கும் பெரிய உள்ளத்தை நீங்கள் வேறு எங்கேயும் பார்க்க முடியாது

-"நான் வேலையை விட்டு நின்னுட்டேன். எனக்குப் பிடிக்கல"
-"அப்படியா"
-"ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது"
-"ஆமாம். நிறைய பேசினார். அவர் கதையெல்லாம் சொன்னார்"
-"அப்படியா"
-"வெளியே வர்றதுக்கு முன்னாடி அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்"
-".................."திக் கென்றது
-"உதட்டில்"
-".................." திக் திக் திக் திக். "அப்போ, நாளையிலிருந்து ஆபிஸூக்கு வருவீங்களா?" அவள் உதடுகளைப் பார்த்தபடியே கேட்டேன்
-"இல்ல, வரமாட்டேன். என் பஸ் வந்துடுச்சி. நான் கிளம்புறேன். நீங்களும் சீக்கிரமா, நல்ல வேலை தேடிக்கோங்க. bye"
-"bye"

பஸ் ஸ்டாப் பின்புறமிருந்த கட்டைச் சுவரில் உட்கார்ந்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த பெரிசு பெர்வர்ட்டா? இல்லாட்டி இந்த சுசீலாவா? இல்லாட்டி நானா?

என்னடா, சிறுகதைன்னு நினைச்சுப் படிச்சா, இது புதிர் கதையால்ல இருக்குன்னு நினைக்கிறீங்களா? இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லுங்க. தப்பான பதில் சொன்னா, உங்கள் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறும்னு, விக்ரமாதித்யன் வேதாளம் மாதிரி சாபமெல்லாம் விட மாட்டேன். நீங்கள் எந்த பதில் சொன்னாலும், அது சரி தான். எதையாவது சொல்லுங்கள். அதுவரை, எதாகிலும் முருங்கை மரம் கிடைக்குமான்னு பார்க்கிறேன்.

2 comments:

viswanath said...

kieslowski yin, moovannangalil oru padathil, andai veetarai ulavu parkum (eaves dropping) oru kadha pathiram varum...avvaru seyyum eaves dropperai kadhaiyin protagonist ambala paduthukiran. oor mun per nari pona nelaiyil, thannai kaati kuduthavanidam iruthiyal thanadhu izhi seyalai gyaya paduthum vidham oru unmaiai kooru kiran..athu evan than vouyeristic icchaikalai poorthi seyya mookai neetiya andai veetu manithan maniviyai ematri kondirukkiram enbathe( if my memory proves right) manitha yukyathanmai patriya kadhai solliyin indha nilai badu uraithathu...melum ezuthuga..all the best

rahini said...

அதுவரை, எதாகிலும் முருங்கை மரம் கிடைக்குமான்னு பார்க்கிறேன்.

kidaika vaalththukkal